Pages

Monday, December 26, 2011

பரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு வைத்த ஜூனியர் விகடன்!



'புலானாய்வு' என்ற பெயரில் புடலங்காய் ஆய்வு செய்து குப்பை கொட்டிவரும் வாரப்பத்திரிக்கைகளுள் ஜூனியர் விகடனும் ஒன்று. கடந்த டிசம்பர்-7 ஆம் தேதியிட்ட இதழில் "'இது வெடிகுண்டு மாதிரியில்ல இருக்கு?'' என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் வாசித்தபோது ஜூனியர் விகடன் மதவெறி வெளிப்பட்டது. முழு கட்டுரையையும் வாசிப்போம்:
******************************
"இது வெடிகுண்டு மாதிரியில்ல இருக்கு?''கண்மாய்க்குள் தூக்கிப் போட்ட மாணவர்கள்!


போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் அலி, சதிச் செயல்களுக்காக வெடிகுண்டுகளை முதன் முதலில் வெடிக்கச் செய்து சோதித்துப் பார்த்த இடம், மதுரை மாவட்டம், ஓவா மலை. இப்போது, அதற்கு அருகிலேயே பஸ்ஸுக்குள் வெடிகுண்டு சிக்கியிருப்பது மதுரை மக்களின் நிம்மதிக்கு வேட்டு வைத்திருக்கிறது. 

டிசம்பர் 6-ம் தேதி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கடந்துவிட்ட சூழ்நிலையில், அதற்கு மறுநாள் காலையில்தான் இந்தச் சம்பவம்.  குண்டு வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ்ஸில் பயணம் செய்த பாலிடெக்னிக் மாணவர்கள் சயாரத்னம், அர்ஜூன் ஆகியோரிடம் நாம் பேசினோம். 'மேலூரில் இருந்து திருவாதவூர் வழியாக, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு வர்ற பஸ் அது. 7-ம் தேதி காலையில் 7.10 மணிக்கு திருவாதவூர் வந்த அந்த பஸ், 7.25 மணிக்கு அகதிகள் முகாம் பஸ் நிறுத்தத்துக்கு வந்தது. அப்போ ஸீட்டுக்கு  அடியில், பாலிதீன் பை ஒண்ணு கிடந்தது. எங்களோடு பஸ்ல வந்த இலங்கை அகதியான நிஷாந்த் என்பவர் அதை எடுத்து, கண்டக்டர் விருமாண்டியிடம் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்த கண்டக்டர், 'இது வெடிகுண்டு மாதிரில்ல இருக்கு. உடனே வெளியே தூக்கிப் போடுப்பா’னு சொன்னார். உடனே டிரைவர் பஸ்ஸை நிறுத்த, சில மாணவர்கள் கீழே இறங்கி அந்த பார்சலை முத்தம்பட்டி கண்மாய்க்குள் போட்டார்கள். 

ஆனாலும், பயத்தில் பஸ்ஸுக்குள் வேறு எதுவும் இருக்கிறதா என்று தேடினோம். பயந்துபோன கண்டக்டர் மேலூர் டெப்போவுக்குப் போன் போட்டு விஷயத்தைச் சொன்னார். பஸ்ஸை நேராக ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகச் சொல்லிட்டு, வெடிகுண்டு பற்றி போலீஸுக்குத் தகவல் கொடுத்து விட்டார்கள். பஸ் ஒத்தக்கடைக்கு போகும்போதே, எதிரே வெடிகுண்டு நிபுணர்கள் குழு திருவாதவூர் நோக்கிப் போனது...' என்றனர் திகிலுடன்! 

அதற்குள்,வெடிகுண்டு நிபுணர்கள் கண்மாயில்கிடந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்து,ஒத்தக்கடைபோலீஸ் நிலையத்துக்குக் கொண்டுவந்தார்கள். மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆஸ்ரா கர்க், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. மகேஸ்வரி மற்றும் கியூ பிராஞ்ச் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். 


பரபரப்புக்காக குண்டு வைத்த ஜூனியர் விகடன்
க்யூ பிராஞ்ச் அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டோம். 'வெடிகுண்டை முழுமையாக சோதித்துப் பார்த்தோம். பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் ஒன்பது வாட்ஸ் திறன்கொண்ட நான்கு நிப்பான் பேட்டரிகள், கடிகாரத்தின் இயந்திரப் பகுதி, சில மின் வயர்களைப் பொருத்தி ஒரு சுவிட்ச்சோடு இணைப்புக் கொடுத்திருந்தார்கள். பகல் 12 மணிக்கு வெடிக்குமாறு கடிகாரத்தில் செட் செய்யப்பட்டு இருந்தது. சிறிதளவு மட்டுமே வெடிமருந்தை ஒரு காகிதத்தில் சுற்றி லட்சுமி வெடியில் இருப்பதுபோல உருளையாகச் செய்து இருந்தார்கள். அதற்கு இரண்டு வயர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த குண்டு வெடித்து இருந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. மக்களுக்கு பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் குண்டு வைக்கப்பட்டு இருக்கலாம்...'' என்றார்கள்.

சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னத் தகவல் அதிர்ச்சி ரகம். 'வெடிகுண்டு சிக்கிய திருவாதவூர் அருகில் உள்ள உலவுபிச்சான்பட்டிதான் இமாம் அலியின் சொந்த ஊர். பழனி பாபா குரூப்புடன் தொடர்பு வைத்து இருந்த இமாம் அலியும் ஹைதர் அலியும் சேர்ந்து, கடந்த 1990-ம் ஆண்டு ஓவா மலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தபோது, அந்தச் சத்தம் ஊருக்குள் கேட்டது. இப்போது இருப்பதுபோல அப்போது அங்கு கிரானைட் குவாரிகள் எல்லாம் அந்த நாளில் கிடையாது. பீதி அடைந்த மக்கள் மலைக்குத் திரண்டு சென்றபோது, இமாம் அலி, ஹைதர் அலி மற்றும் அவர்களது கூட்டாளிகள் தப்பி ஓடினார்கள். 

பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டபோது, இமாம் அலி மட்டும் துணிச்சலாக, 'ஆமாம், வெடிகுண்டு சோதனைதான் நடத்தினோம். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’ என்று பதில் சொன்னார். பின்பு, அண்ணா பஸ் நிலையம் அருகே போலீஸ் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடியவர், பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்று பங்களாதேஷில் தங்கியிருந்தார். சி.பி.ஐ. போலீஸ், ஒரு கடிதம் மூலம் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துக் கைது செய்தது. அப்போதும் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைத்து, போலீஸாரோடு துப்பாக்கிச் சண்டை போட்டு இமாம் அலியை மீட்டனர் அவரது கூட்டாளிகள். கடைசியில், இமாம் அலியை பெங்களூரில் கண்டுபிடித்துக் கதையை முடித்தது போலீஸ். 

அப்போதே, 'இமாம் அலி புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார்’ என்று மதுரை வீதிகளில் மர்ம நபர்கள் போஸ்டர் ஒட்டினார்கள். அது உண்மைதான் என்பது போல, அடுத்தடுத்து மதுரையில் வெடிகுண்டு சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்தத் தகவல்களை எல்லாம் அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் தெரியப்படுத்தி இருக்கிறோம்.'' என்றார். 

மக்கள் நிம்மதிக்கு அரசுதான் வழி காட்ட வேண்டும்! 
- கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து
******************************
மேற்கண்ட கட்டுரையை நன்கு வாசித்தால் அதில் சொல்லப்பட்டுள்ள விசயம் மதுரை அகதிகள் முகாம் அருகே வெடிகுண்டு ஒன்றை பேருந்தில் வைத்திருந்ததை மாணவர்கள் கண்டு ,தகவல் தெரிவித்துள்ளார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்ததோடு, பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் நோக்கில் விஷமிகளின் செயல் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னணியில் முஸ்லிம் எவருமே இல்லாதபோதும், அதை போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இமாம் அலியுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது அப்பட்டமான விஷமத்தனம். மட்டுமின்றி இமாம் அலி முன்பு ஒருமுறை வெடிகுண்டை வெடிக்கச் செய்தாராம். அது பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குத்தான் என்று சொன்னாராம்! பாபர் மசூதி இடிக்கப்பட்டது 1992 டிசம்பர்-6. ஆனால் இமாம் அலி அதற்கு "இரண்டு ஆண்டுகள்முன்பே" அதாவது 1990 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வெடிகுண்டு சோதனை நடத்தினாராம்! என்ன ஒரு மொள்ளைமாறித்தனம் பாருங்கள்!

எங்காவது வெடிகுண்டு வெடித்தாலோ அல்லது சோதனை நடத்தப்பட்டாலோ அதற்கு முஸ்லிம்களே காரணம் என்ற கருத்துருவாக்கம் செய்வதில் சங்பரிவார பிண்ணனி கொண்ட ஊடகங்கள் செய்துவருவதை அறிவோம். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக ஜூனியர் விகடனும் செயல்படுவது நடுநிலை வாசகர்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதை ஜூ.வி உணரவேண்டும்.

கட்டுரையின் கயமைத்தனத்தை வாசகர்கள் கருத்து பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தபோதிலும் கொஞ்சம்கூட வெட்கமின்றி சிறுவருத்தமோ திருத்தமோ செய்யாது விட்டுவைத்துள்ளதைப் பார்த்தால் டிசம்பர் முதல்வாரத்தில் பரபரப்புக்காக செய்தி வெளியிடவேண்டும் என்ற துர்நோக்கத்தில் ஜூனியர் விகடனேகூட அந்த வெடிகுண்டை பேருந்தில் வைத்திருக்குமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

நன்றி : - கலீல், மதுரை. இந்நேரம்.காம் 

0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?