Pages

Wednesday, July 15, 2020


பெங்குயின்  - விமர்சனம் 




பெண் குயீன் இதைத்தான் ஆங்கிலப்படுத்தி (குயீன் என்பதே ஆங்கிலம்தான்பென்குய்ன் Penguin என்று விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.


கொறொனா காலத்தில் திரைப்படங்கள் வீட்டுக்குள்ளேயே வர ஆரம்பித்துவிட்டன. இனி தியேட்டர்கள் பாடு திண்டாட்டம்தான்.


முதலில்  அமேசான் பிரைமில்   வெளியான ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' திரை அரங்குகளுக்காக எடுக்கப்பட்டு  OTT யில் வெளியானாது. ஆனால் இந்தப்படம் அமெசானுக்காகவே எடுக்கப்பட்டதுபோல் என்றே தோன்றுகிறது. பொன்மகள் வந்தாள் புலி என்றால் அதைப்பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனையாகத்தெரிகிறது "பெண் குயின்".

ஆரம்ப காட்சிக்களே  ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தி  மொக்கைப் படம் என்ற உணர்வை நமக்கு உண்டாக்கிவிடுகின்றது.


பெண் குயின் என்று பெயர் வைத்துவிட்டதாலேயே, வலுக்கட்டாயமாக அனைத்து வேலைகளையும்  கதாநாயகியான  கர்ப்பிணிக்கு திணித்திருக்கிறார்கள்.

வயிற்றைத்தூக்கிக்கொண்டு அவர் எடுக்கும் ரிஸ்க்கான காட்சிகள் விறுவிறுப்பையும் அந்த கதாபாத்திரத்தின் மீது அனுதாபத்தையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக, இவளுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்ற ஆத்திரத்தையே உண்டுபன்னுகின்றன.

முதல் காட்சியில் கதாநாயகியின் அந்த குழந்தை காணாமல் போய் பிறகு சில நிமிடங்களில் திரும்ப கிடைக்கிறான் . பிறகு ஸ்கூலில் இருந்து காணாமல் போய்விடுகிறான்.

போலீஸ் அந்த குழந்தை கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க, கதாநாயகி மட்டும் ஆறு வருடங்களாக அந்த குழந்தை வந்துவிடும் என்று காத்திருக்கிறாள் .


ஒரு அபாயகரமான சூழ்நிலையில் அந்த குழந்தை மீண்டும் கிடைக்கிறது ஆனால் யாருடனும் பேசவில்லை.காரணம் கடத்தப்பட்டவனால் சித்ரவதைக்குள்ளாகி மனச்சிதைவுக்கு ஆளாகியிருக்கிறான் என்று டாக்டர் சொல்கிறார்.


இதற்கிடையே குழந்தையை பொறுப்பில்லாமல் காணாமல் போகவிட்ட காரணத்தை வைத்து அவள் கணவன் விவாகரத்து பெற்று அவளைப் பிரிந்துவிட , வேறொருவனை மணந்து அதன் மூலம் இன்னொரு குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் சூழ்லில் இவ்வளவும் நடக்கிறது.

கணவன், நண்பர்கள் மற்றும் போலிஸ் என்று பலபேர் உதவிக்காக இருந்தும், நிறைமாத கர்ப்பிணியாக இருந்துகொண்டு கதாநாயகியே  அனைத்து அட்வெஞ்சர் வேலைகளையும் செய்யும்போதுதான் செம கடுப்பாக இருக்கிறது.


சரி, அவ்வளவு கஷ்டப்பட்டு ஆறு வருடங்கள் கழித்து கிடைத்திருக்கும் அந்த குழந்தையை பாதுகாக்க கதாநாயகி எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் ஏற்கனவே கடத்தப்பட்டவனால் அந்த குழந்தைக்கு ஆபத்து என்று தெரிந்தும் அதிகமான நெரிசல் உள்ள பகுதிகளுக்கு அந்த குழந்தையை தனியாக அழைத்து சென்று தனியாக விட்டு விட்டு மீண்டும் ஒருமுறை தவற விடுகிறாள்.


காரில் அந்தக்குழந்தையை எந்த விதமான பாதுகாப்பும் இன்றி விட்டுச்செல்வது, பாதுகாப்பற்ற தனிமையான வீட்டில், அந்த குழந்தையை தனி அறையில் விட்டுவிட்டு இவள் கணவனுடன் வந்து படுத்துகொள்வது என்று ஏன் என்று கேட்கவைக்கும் காட்சிகள் மிக அதிகம். ஓரு கட்டத்தில் கடத்திச் சென்ற வில்லனே ( வில்லனுக்கு சார்லி சாப்ளின் முகமூடி வேற) நடு இரவில் ரொம்ப சாதாரணமாக வீட்டுக்குள் ஒரு விருந்தாளியைப்போல வந்து குழந்தையை குசலம் விசாரித்துவிட்டு கதா நாயகியைத் தாக்கி விட்டும் செல்கிறான்.

அதற்க்குப்பிறகும் அந்த குழந்தைமீது கவனமில்லாமல் தன் வீரத்தைக்காட்டவே கதாநாயகி முயல்கிறாள்.


கூட உள்ள நாயை கவனமாக தன் கையில் சங்கிலியை வைத்து அழைத்துசெல்லும் அவளால் அந்த குழந்தைமீது கவனம் செலுத்துவதில் அக்கரை காட்டவே முடியவில்லை. இவ்வளவுக்கும் குழந்தைக்கும் கதாநாயகிக்கும் உள்ள பாசப்பிணைப்புதான் கதையே.




இறுதியில் ஒரு வீட்டுக்கு அந்த நாய் அழைத்து செல்ல அங்கிருப்பவரே வில்லன் என்று காட்டுவதற்காக அவர் வீட்டிற்குள் அறிவாளால் எதையோ ரத்தம் சொட்ட சொட்ட வெட்டிக்கொண்டிருந்து ஒரு சாதாரண போராட்டத்திற்க்க்குபிறகு அவர் போலீசில் பிடிபட்டு, அவரை போலீஸ் விசாரிக்கையில், வில்லன் நான் எல்லாவற்றையும் கதா நாயகியிடம்தான் விளக்குவேன் என்று போலிஸை மிரட்ட, போலீசும் அவளை அவனிடம் பேசவிடும் காட்சி படத்தில் காமெடி இல்லாத குறையைப் போக்குகிறது.


 அப்புறம் என்னடான்னு பாத்தா அவன் பிள்ளைகளை கடத்துரவன்தான் ஆனா அந்த பிள்ளைய தான் கடத்தவில்லை என்கிறான்.


 இதன் பிறகு மீண்டும் குழந்தை கடத்தப்படுகிறான் ( ஸ்ஸூ அப்பாடா...தாங்கமுடியல)

அந்த வில்லன் கொடுத்த சில குறிப்புகளை வைத்துக்கொண்டு அது யாரென்று கண்டுபிடித்து இப்பவும் அவளே நிறைமாத கர்ப்பத்துடன் தனியாக செல்லும்போது நமக்கு வரும் வெறுப்புக்கு அளவே இல்லை. மிருகங்களை வதைப்பதாக காட்டுவதை

குற்றமாக இருக்கும்போது கர்ப்பிணி பெண்களை இப்படி துன்புறுத்துவதுபோல் காட்டப்படுவதும் குற்றம் என்றே கருதவேண்டும்.


கடைசியில் குழந்தையை கடத்தி வைத்திருக்கும் அந்த சார்லி சாப்ளின் வேடதாரி, எதனால் இவ்வாரெல்லாம் செய்தேன் என்று ஒரு சொதப்பலான காரணம் சொல்லி, கதாநாயகிக்கு விஷம் கொடுத்து விட்டு, அந்த குழந்தைக்கும் விஷம் கொடுத்து விட்டதாக சொல்லி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்துப்போய்விட, கதாநாயகி காட்டுக்குள் ஒரு சுரங்கத்தில் அடைபட்டிருக்கும் அந்த குழந்தையை  கண்டுபிடிப்பது - சிரிக்கமுடியாத காமெடியென்றால், இதுநாள் வரை வாயே திறக்காத அந்த குழந்தை "அம்மா வந்து காப்பத்துங்கம்மா" என்று க்ளைமாக்ஸ் நேரத்தில் பேசுவது இன்னொருவகைக் காமெடி.

வீட்டுக்குள் இருந்துகொண்டு பார்ப்பதில் ஒரு வசதி இருக்கிறது.


கையில் ஒரு தலைவலி மாத்திரையோ  அல்லது தலைவலி தைலமோ தயாராக இருக்கும்.

அதைவிட சிறந்த வழி அமெசான் பிரைம் பக்கம் போகாமலிருப்பதுதான்.