Pages

Monday, December 20, 2010

நாளிதழில் இடம்பெற்ற பயனுள்ள செய்திகள்.

1. கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மொபைல்போனுக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


இதுகுறித்து ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியதாவது:மொபைல்போன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.


ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர்; உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர்.இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.இவ்வாறு லீகா கூறினார்.

-------------------------------------------------------------------------------------------------------------
2. திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் பெறும் மாறுதல் ஏற்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றம் குறித்து, மெக்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்சாண்டிரா பட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 17 முதல் 29 வயது வரையிலான திருமணமான மற்றும் திருமணமாகாத, தலா 289 ஆண்களிடம் 12 ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களின் குணநலன்களில் மாற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.


திருமணத்திற்கு முன், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஆண்கள், திருமணத்திற்கு பின், அந்த செயல்களை அறவே தவிர்க்கின்றனர். அவர்களிடம் உள்ள முரட்டுத்தனம் மாறி, மென்மையானவர்களாகவும், இனிமையாக பழக கூடியவர்களாகவும் மாறுகின்றனர். பொய் சொல்வதை தவிர்க்கின்றனர்.பிறர் தவறு செய்யும் போது, அதை மன்னிக்கும் பக்குவமும் அவர்களிடம் வந்து விடுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற திருமணமாகாத 29 வயது ஆண்களில் 1.3 சதவீதம் பேர் முரட்டுத்தனமாகவும், சமூக விரோத போக்கை கடைபிடிப்பவர்களாகவும் இருந்தனர். அதே வயதில் திருமணமான 0.8 சதவீதம் பேர் மட்டுமே இந்த குணங்களை கொண்டிருந்தனர்.பரம்பரை மற்றும் வளர்ப்பு சூழல் காரணமாகவும் குழந்தையிலிருந்தே முரட்டுதனமான குணங்களை கொண்டிருந்தவர்களும் திருமணத்திற்கு பிறகு மாறுகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறித்து, இந்த ஆய்வில் பங்கேற்காத அல்பேனி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரெயான் கிங் கூறியதாவது:திருமணத்திற்கு பின், ஆண்கள் மாறுகின்றனர் என்பது உண்மை தான் என்றாலும், அதற்கான காரணம் தான் புரியவில்லை. திருமணத்திற்கு முன்பு ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது உள்ளிட்ட பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். முரட்டுத்தனமான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் இதுவே காரணம். அவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இந்த தொடர்புகளை அவர்கள் துண்டித்து கொள்கின்றனர். எனவே, அவர்களின் குண மாற்றத்திற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ரெயான் கிங் தெரிவித்தார்.

--------------------------------------------------------------------------------------------------


3, மாற்றுத் திறனாளியான மேடைப் பேச்சாளர் பெனோசெபின்: நான் பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளி என்பதால், எனக்கான உலகம் எப்போதும் கறுப்பாகவே உள்ளது. பெற்றோர், அக்கா, மாமா, ஆசிரியர்கள், நண்பர்கள் இல்லையெனில், நான் வெளிச்சத்திற்கு வந்திருக்க முடியாது.லிட்டில் பிளவர் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில், பார்வையற்றோர் பிரிவில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்தேன். ஆனால், அதற்கான அங்கீகாரம் எனக்குக் கிடைக்கவில்லை. மற்ற மாணவர்கள் படிக்கும் அதே பாடத்திட்டங்கள் தான் எங்களுக்கும். அவற்றைப் படித்து, மாநிலத்திலேயே முதல் இடம் பிடிப்பது என்பது பெரிய விஷயம்.இது குறித்த கோரிக்கையை அரசுக்கு முன்வைத்தேன்; நான் அங்கீகரிக்கப்பட்டேன். பின், அமெரிக்காவில் நடந்த இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றேன். அந்த மாநாட்டில் பங்கேற்ற ஒரே மாற்றுத் திறனாளி நான் தான். பார்வையற்ற முதல் இளம் தலைவராகவும், என்னைத் தேர்ந்தெடுத்தனர்.அங்கு, சுற்றுச் சூழல், கல்வி, இந்தியக் கலாசாரம் ஆகியவற்றை குறித்த என் பேச்சிற்கு, நல்ல வரவேற்பும், மரியாதையும் கிடைத்தது. அது என்னை இன்னும் உத்வேகம் கொள்ள வைத்தது. கல்லூரியில் சேர்ந்த பின், தமிழ் மீதும், ஆங்கிலம் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. அதுவரை பொழுது போக்கிற்காக படித்தாலும், இலக்கிய வகுப்பில் சேர்ந்தபின், இரண்டு மொழி படைப்புகளையும் பொருத்திப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இரண்டிலும் நல்ல ஆளுமை பெற்றேன்.இதுவரை, 120 மேடைகளுக்கு மேல் உரை நிகழ்த்தி இருக்கிறேன். மாநில அளவில் தமிழ் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள் தேசிய அளவில் அவ்வளவாக நடத்தப்படுவது இல்லை என்றாலும், காத்திருக்கிறேன். நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால், தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு தயாராகி வருகிறேன்.

------------------------------------------------------------------------------------------------------

4. ரயில்வே கண்காணிப்பு துறை வேண்டுகோள்: "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் அனுமதி இல்லாத ஏஜென்டுகளிடமும், இடைத்தரகர்களிடமும் டிக்கெட் வாங்கி பயணம் செய்தால், கண்காணிப்பு சோதனையில் மாட்டிக் கொண்டு, அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அனுமதி இல்லாத ஏஜென்டுகள் மற்றும் இடைத்தரகர்களிடம் டிக்கெட் வாங்கி, ரயிலில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்' என்று தெரிவிக்கப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------------------------

5. தமிழக பள்ளிகளில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில் சினிமா "குத்து டான்ஸ்'களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. மாணவர்களிடம் மாறுதலை ஏற்படுத்தும் இதற்கு, பள்ளிக்கல்வித்துறை தடை விதிக்க வேண்டும். தற்போதைய சினிமா பாடல்களில் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பாடல்களே பள்ளிகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் அதிகம் இடம்பெறுகின்றன. பிஞ்சுகளிடம் நஞ்சை விதைக்கும் வகையில் உள்ள சினிமா பாடல்களுக்கு, பள்ளி மாணவர்களை நடனமாட வைக்கும் போக்கிற்கு தடை விதிக்க வேண்டும். அறிவுக்கு வழி வகுக்கும் நிகழ்ச்சிகளை பயன்படுத்த வேண்டும். இது தவிர பல திறமைகள் வெளிப்படுத்துதல் போன்றவற்றை வளர்க்க முன் வர வேண்டும்.


5 comments :

சாமக்கோடங்கி said...

//
5. தமிழக பள்ளிகளில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில் சினிமா "குத்து டான்ஸ்'களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. மாணவர்களிடம் மாறுதலை ஏற்படுத்தும் இதற்கு, பள்ளிக்கல்வித்துறை தடை விதிக்க வேண்டும். //

அட.. பாடல்களைத் தெரிவு செய்வதே பெற்றோர்கள் தானே...

சாமக்கோடங்கி said...

அதுவும் டாடி மம்மி வீட்டில் இல்லை தான் இன்றைய பெற்றோர்களின் சாய்ஸ்... அதற்குக் குழந்தைகள் ஆடும்போது, அவர்கள் கண்ணில் ஆனந்தக் கண்ணீரைப் பார்க்க வேண்டுமே...

சாமக்கோடங்கி said...

அட வடை எனக்குத் தானா.. இப்பத்தான் பார்த்தேன்...

சாமக்கோடங்கி said...

பத்திரிக்கைகள் பற்றி முந்தைய பதிவில் குறையும் சொல்லி, அவைகளில் உள்ள நல்லவைகளையும் தொகுத்துத் தந்து உள்ளீர்கள்.. நல்ல விஷயம்...

மர்மயோகி said...

//சாமக்கோடங்கி said...
அட வடை எனக்குத் தானா.. இப்பத்தான் பார்த்தேன்...//
ஏதாவது மொக்கை பதிவோ அல்லது சினிமா செய்திகள் , விமர்சனமோ , அல்லது எவளாவது ஒரு சினிமாகூத்தாடி பற்றி ஆபாச செய்தியோ எழுதி இருந்தால் உங்களுக்கு முன்னே ஒரு 200 பேர் வந்து கமெண்ட்ஸ் போட்டு இருப்பாங்க...
நன்றி சாமக்கோடங்கி

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?